ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் சொற்ப ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
டெட் தேர்வெழுதாத ஆசிரியர்கள்
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஐந்தாண்டு அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நிகழாண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.
1500 ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம்
இதனைத் தொடர்ந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகப் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
மீண்டும் அவகாசம்
இந்த வழக்கு விசாரணையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேல் அவகாசம் வழங்கப்பட்டும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 ஆயிரம் பேர் வேலைக்கு வர தயாராக உள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க உத்தரவிட்டதோடு, ஜூனில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
சொற்ப ஆசிரியர்களே தேர்ச்சி
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் புதிய தேர்வர்களே அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலைக்கு சிக்கல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களில் மிகக் குறைந்த அளவிலான தேர்வர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களைத் தவிர, மீதமுள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












