ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பாடத்திட்டத்தினை மாற்றம் செய்து நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் படி தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நாடு முழுவதும் ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு அமலாகி உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். நடப்பாண்டில் அக்டோபர் மாதத்தில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஜூலையில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல்வேறு முறைகேடுகள் பிரச்சனையின் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்வுப் பணிகள் முடங்கின.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வை தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டத்தின்படி இல்லாமல் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












