பொறியியல் படித்த பட்டதாரிகள் இனி ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொறியியல் படித்துவிட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரி விட்டு வெளியே வருகின்றனர். இவர்களில் சில நூறு மாணவர்களுக்கே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலை இன்றி கிடைத்த வேலைக்குச் செல்லும் சூழல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சமீபத்தில் கோவை மாநகராட்சியில் நடைபெற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கான நேர்காணலில் ஆயிரக் கணக்கான பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.எட். படித்து விட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு எழுதலாம் என்றும், இதில் தேர்ச்சி பெறுபவர்கள், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குக் கணக்கு ஆசிரியராக பணியாற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கலை மற்றும் அறிவியல் படிப்பை மடித்தவர்கள் மட்டுமே ஆசிரியருக்கான பி.எட் படிப்பை மேற்கொள்ள முடியும் என்ற நிலை கடந்த 2015-2016-ம் கல்வியாண்டில் மாற்றப்பட்டு, பி.இ. படித்தவர்களுக்கும் பி.எட். படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், டெட் தேர்வு எழுத தகுதி வழங்காமலிருந்தது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கும் டெட் தேர்வில் சமநிலை அந்தஸ்து கொடுத்திருப்பதால் இனி அவர்களும் ஆசிரியராக பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
பி.இ பட்டப் படிப்புகளில் எந்தப் பிரிவில் படிப்பு மேற்கொண்டிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.