குற்றாலீசுவரன், தனது 12ஆவது வயதில் பாக்ஜலசந்தியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது 10 வயது சிறுவன் ஐந்தரை மணி நேரத்திற்கு முன்னதாகவே நீந்தி கடந்து இலக்கை அடைந்திருப்பது சாதனையாக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின் மகன் ஜெய் ஜஸ்வந்த். 10 வயது சிறுவனான இவர், தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2016ஆம் ஆண்டிலிருந்து, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் என நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது 8-ஆவது வயதில், 81 நிமிடம் தொடர்ந்து நீந்தி உலக சாதனையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குற்றாலீஸ்வரனைப் போல், பாக் ஜலசந்தியை நீந்தி கடக்க வேண்டும் என விரும்பினார். அதற்கென சிறப்பு பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள், பயிற்சியாளர் விஜயகுமார், மாணவர் ஜெய் ஜஸ்வந்த் உள்ளிட்டோர் இரண்டு படகுகளில், இலங்கைக்கு உட்பட்ட தலை மன்னாருக்கு, புதன்கிழமை சென்று வியாழக்கிழமை, அதிகாலை 4 மணிக்கு, தலைமன்னாரில் இருந்து, நீந்த தொடங்கினார் ஜெய் ஜஸ்வந்த்.
தலைமன்னாரில் இருந்து, பாக்ஜலசந்தி கடற்பகுதியில் எங்கேயும் இடைநிற்காமல் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார். இதில், குறிப்பிடத்தக்க விசயம், தலைமன்னாரில் இருந்து, 10 மணி நேரம் 30 நிமிடங்களில், தனுஷ்கோடியை வந்தடைந்தார், 4ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஜெய் ஜஸ்வந்த்.
1994ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில், குற்றாலீசுவரன், பாக் ஜலசந்தியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், இந்த சாதனையை, தனது 10ஆவது வயதில், குற்றாலீசுவரனை விட, 5.30 மணி நேரத்திற்கு முன்னதாகவே நீந்தி கடந்து இலக்கை அடைந்துள்ளார் இந்த மாணவர்.
மிக குறைந்த வயதில், பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து, சாதனை படைத்திருக்கும் மாணவர் ஜெய் ஜஸ்வந்தை, .டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வரவேற்று மகிழ்ந்தனர். மேலும், இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் சாதனை மாணவர் ஜெய் ஜஸ்வந்திற்கு குறைந்த நேரத்தில் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டது.