சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றுகளை வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிகின்றன. அதேபோல எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்து வருகின்றன. சென்னையில் மாவட்டத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 24,653 மாணவர்களும், 28,747 மாணவியரும் எழுத உள்ளனர். இதையடுத்து கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது தவிர பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் சபீதா தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி, தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்வுகள் குழப்பம் இல்லாமல் நடத்துவது, பாதுகாப்பான முறையில் கேள்வித்தாளை வைத்திருப்பது குறித்தும் அறிவுரைகளை செயலாளர் சபீதா வழங்கினார். மேலும் மின்தடை இல்லாமல் இருக்க ஜனரேட்டர் வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டதும், உயர்கல்விக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்களுடன் மதிப்பெண் பட்டியலும் இணைக்க வேண்டும் என்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் கேட்பதால் தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில் தற்காலிகமாக மதிப்பெண் சான்றுகளை வழங்கலாம் என்றும், அப்படி வழங்கப்படும் சான்றுகள் 3 மாதங்கள் வரையில் செல்லுபடியாகும் வரையில் அமைய வேண்டும் என்றும் சபீதா தெரிவித்தார்.
இதன்படி தற்காலிக சான்றுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்களே பதிவிறக்கம் செய்து கொடுக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானதும் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்யத் தொடங்கியுள்ளது.