சென்னை : நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுத அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும் என்பதை அறியாதவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வந்ததால் அவர்களுடைய சட்டையை கத்திரிக் கோலால் வெட்டி அரைக்கை சட்டை ஆக்கினார்கள்.
நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாணவர் என்றால் ஆண் போலீசாரும், மாணவி என்றால் பெண் போலீசும் பரிசோதனை செய்தனனர்.
ஷூ, பெல்ட், செல்போன், கைக்கடிகாரம், பேனா, கால்குலேட்டர், செயின் மோதிரம் தலையில் அணியக்கூடிய கிளிப் ஆகியவை கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே நீட் தேர்வுக்கான விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சில தேர்வர்கள் மேற்கண்ட பொருட்களை கொண்டு வந்தனர். இறுதியில் பெற்றோரிடம் செயின் கம்மல் மூக்குத்தி கைக்கடிகாரம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.
கடும் விதிமுறைகள்
சில மாணவர்கள் விதிமுறைகளை நன்றாக படிக்காமல் தேர்வு எழுத அரைக்கை சட்டைக்குப் பதிலாக முழுக்கை சட்டை அணிந்தபடி வந்திருந்தனர். அவர்களிடம் நீங்கள் முழுக்கை சட்டை அணிந்தபடி வந்திருக்கிறீர்கள் என்றும் இப்படியே உங்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றும் பரிசோதனை செய்தவர்கள் கூறினார்கள். உடனே அந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் முழுகைக சட்டையை கத்திரிக் கோல் வெட்டி அரைக்கையாக்குங்கள் என்று கூறினார்கள்.
சட்டையை கிழித்து தேர்வெழுதியவர்கள்
இதைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள கடையில் கத்தரிக்கோல் வாங்கி தேர்வு எழுதுவோரின் முழுக்கை சட்டையை வெட்டி அரைக்கை சட்டையாக்கினார்கள். சில மாணவர்கள் சட்டையை பெற்றோர்களிட்ம் கழற்றி கொடுத்து அதன் பின்னர் அரைக்கை சட்டையாக்கினார்கள். இது போல முழுக்கைசட்டை அணிந்தோர் அனைவரும் தங்கள் சட்டையை அரைக்கையாக்கினார்கள்.
தலைவிரிக் கோலத்துடன் மாணவிகள்
சில பெண்கள் தலை முடியில் கிளிப் மாட்டியபடி வந்திருந்தனர்., அவர்களிடம் உள்ள கிளிப்பை சோதனையாளர் அகற்றியதால் தலை முடியை விரித்தபடியே அவர்கள் தேர்வு எழுத சென்றனர். சில மாணவிகள் காலில் கொலுசு அணிந்தபடி வந்திருந்தனர். அதற்கு மறுக்கப்பட்டதால் பெற்றோர்கள் அவசர அவசரமாக தனது மகள்களின் கால்களில் கிடந்த கொலுசை கழற்றினார்கள். பர்தா அணிந்து செல்லவும் அனுமதிக்கவில்லை. இப்படியாக பல சோதனைகள் நடைபெற்றன.
சோதனை மேல் சோதனை
நீட் தேர்வுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகளால் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தேர்வு எழுதினார்கள். மாணவிகள் முடியை விரித்துப் போட்டுக் கொண்டு தேர்வு எழுத சென்றார்கள்- தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்கொள்வதே மாணவ மாணவியர்களுக்கு பெரும் சோதையாக இருந்தது. அதைவிட தேர்வறைக்கு செல்லுவதற்கு முன் செய்யப்பட்ட சோதைனை கடுமையாக இருந்தது. மாணவ, மாணவியர்கள் இதினால் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். நிறைய மாணவர்கள் கடும் மன உளைச்சலுடன் போய் தேர்வினை எழுதிவிட்டு வந்திருக்கிறார்கள்.