சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளின் வேலை நாட்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த நான்கு கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டு அதன் கீழ் அனைத்து வகை பள்ளிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளதுடன் சிறுபான்மை மொழிக்கான பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன.
ஆனால், மத்திய அரசின் பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ்(சிபிஎஸ்இ) செயல்படும் பள்ளிகள் மாநில பாடத்திட்டப் பள்ளிகளில் இருந்து வேறுபட்டு தெரிகின்றன.
தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே செயல்பட்டு வந்த சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை சமச்சீர் கல்வி முறைக்கு பிறகு அதிகரித்து தற்போது 580 என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இது தவிர மேலும் 100 பள்ளிகள் தொடங்க தமிழகத்தில் விண்ணப்பங்கள் போடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் முற்றிலும் மத்திய அரசின் என்சிஇஆர்டியின் வரைவு பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. அதேபோல பள்ளிகளின் வேலை நாட்களும் மேற்கண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதங்களில் பள்ளிகளை தொடங்கி மார்ச் ஏப்ரலில் தேர்வுகளை முடித்து மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கின்றன. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் இதற்கு முன்னதாகவே தேர்வுகளை முடித்துவிட்டு மார்ர் ஏப்ரலில் அடுத்த கல்வி ஆண்டை தொடங்கிவிட்டு மே மாதம் விடுமுறை அறிவிக்கின்றன.
இதனால் மார்ச் ஏப்ரலில் பாடங்களை நடத்தத் தொடங்கிவிடுவார்கள். மே மாதத்துக்கு பிறகு மீண்டும் அதே பாடங்களை ஆசிரியர் நடத்த வேண்டும்.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகள் நடத்தும் போது வெயில் கொடுமையால் பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதனால் ஜூன் மாதத்தில் இருந்துதான் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்குகின்றனர். அதனால் விடுபட்ட மாணவர்களுக்காக மீண்டும் ஒரு முறை பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் மாநில பள்ளிகளுக்கு உள்ளது போல சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கோடை விடுமுறை, பள்ளி திறக்கும் நாட்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ இயக்குநர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.