சென்னை: அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 5 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2,000-த்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
செவிலியர் பள்ளிகளில் மொத்தம் 8 முதல்வர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும் கூடுதலாக 150 ஆசிரியர்களையும் நியமனம் செய்யவேண்டியுள்ளது.
ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மூப்பு அடிப்படையில் முதல்வர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். ஓய்வு பெற்றதும் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் கல்லூரிக்குத் தேவையான தீர்மானங்கள், முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் நிர்வாகம் தொடர்பான பணிகளை ஆசிரியர்களும், துணை முதல்வர்களுமே மேற்கொள்கின்றனர். நிர்வாகப் பணிகளை கவனிப்பவர்களால் வகுப்புக்குச் செல்ல இயலாது. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்று மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதைப் போலவே கல்லூரிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அந்த இடங்களை அரசு விரைவில் நிரப்பவேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுபொதுத் தேர்வாணையம் எடுக்கவேண்டும் என்று மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.