சென்னை : பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றியும், 11வது வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது பற்றியும் தமிழக அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடபுத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் பங்குபெற ஆர்வம் தெரிவிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் www.tnscert.org விபரங்களை ஜூன் 23ந் தேதி நேற்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இதற்கான காலஅவகாசம் ஜூலை 2ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்தியாவின் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டச் சீரமைப்பு அறிக்கைகள் (கோத்தாரி குழுவின் அறிக்கை, தேசியக் கலைத்திட்ட வரைவு 2005 மற்றும் புதிய கல்விக் கொள்கை (வரைவு) 2017-2018 ஆகியவற்றில் கருத்துச் செறிவு பெற்றிருத்தல் அவசியம். விருப்பமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி தெரிவித்துள்ளார்.