சென்னை : தமிழக அரசு தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதியத்தை உயர்த்த உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படாத ஊதியம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாளரின் மதிப்பூதியம் ரூ.115-ல் இருந்து ரூ.133 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.80-ல் இருந்து ரூ.92 ஆகவும், வினாத்தாள் கட்டுகாப்பாளருக்கு ரூ.69-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாளரின் மதிப்பூதியம் ரூ.92-ல் இருந்து ரூ.106 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.57-ல் இருந்து ரூ.66 ஆகவும், வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.46-ல் இருந்து ரூ.53 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.
இதேபோல இதர அலுவலர்கள், ஊழியர்களுக்கும் மதிப்பூதியம் திருத்தி அமைக்கப்படுகிறது. பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு அளிக்கப்படும் உழைப் பூதியம் ரூ.7.50-ல் இருந்து ரூ.10 ஆகவும், எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்துவோருக்கான உழைப்பூதியம் ரூ.6-ல் இருந்து ரூ.8 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
தேர்வு கண்காணிப்புப் பணி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மதிப்பூதியம், உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறைச் செயலர் த.உதய சந்திரன் ஆகியோருக்கு தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ், இணை அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












