சென்னை: முதுநிலை பட்டதாரிகள் நியமனத்துக்கான கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி அடைந்த 1789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நாளை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் இந்த ஆன்லைன் கவுன்சலிங் நடக்கிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் அந்த அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாளை தமிழகம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வருவோர் எப்படி வருவார்கள் என்ற பிரச்னை இப்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த கவுன்சலிங் நடத்துவதற்கு முதுநிலை பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆசிரியர் பணி மாறுதல் கேட்டு ஆசிரியர்கள் விண்ணப்பித்த போது, பொது தேர்வுகளை காரணம் காட்டி பணி மாறுதல் கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பல ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மே மாதம் பணி மாறுதல் கவுன்சலிங் நடக்கும் போது மாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் அதற்கு முன்னதாக காலிப் பணியிடங்களில் புதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்துவிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் நாளை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












