சென்னை: தேர்வு அறை கண்காணிப்பாளரை சஸ்பெண்டு செய்யும் தேர்வுத்துறையை கண்டித்து ஆசிரியர்கள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்து பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டால் தேர்வு அறைக் கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்துறை அறிவித்து, அதன் படி கண்காணிபாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர்.
இதை வலியுறுத்தி ஆசிரியர் சார்பில் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வு அறைக்கும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை கண்காணிபாளர்கள் அறிவுரையாக மட்டுமே சொல்ல வேண்டும் என்ற விதியே உள்ளது. மாணவ மாணவியரை உடல் ரீதியாக சோதனை செய்யக் கூடாது என்ற விதியும் உள்ளது.
எனவே மாணவர்கள் தங்கள் ஆடைக்குள் துண்டுச் சீட்டுகளை மறைத்து வைத்திருந்தால் அவற்றை சோதிப்பது இயலாத காரியம். இந்நிலையில் பறக்கும் படையிடம் மாணவர்கள் சிக்கும் போது, கண்காணிப்பாளர் எப்படி பொறுப்பாவார்?
அவரை பணி நீக்கம் செய்வது என்பது ஏற்க முடியாது. பறக்கும் படையினர் வந்து சென்ற பிறகு மாணவர்கள் பிட் அடித்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுகிறது. எனவே கண்காணிப்பாளரை சஸ்பெண்டு செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட மாட்டார்கள்", என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை வெளிப்படுத்தும் வகையில் வகையில் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி வைத்தனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டன.