சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பல லட்சம் ஆசிரியர்கள் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் அடுத்தகட்டமாக பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட உள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே சம்பளம் நிர்ணயிப்பதில் ஒவ்வொரு ஊதியக் குழு பரிந்துரை வெளியாகும் போதும் பிரச்னை ஏற்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு போராட்டங்களை ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. மத்திய அரசு ஆசிரியர்களுக்கும், தமிழக அரசின் ஆசிரியர்களுக்கும் இடையே சுமார் ரூ.9500 ஊதிய வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கடந்த மாதம் மனு கொடுத்தனர். இதன் பேரில் முதல்வரை சந்தித்துப் பேசி ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக ஆசிரியர்களை சந்திக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் பேரில் 28 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு பல மணி நேரம் கால் கடுக்க ஆசிரியர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். முதல்வர் பன்னீர் செல்வம் ஆசிரியர்களை சந்திக்க விரும்ப மனமில்லாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால் ஆசிரியர்கள் மனம் நொந்துபோனார்கள். அதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பேரணியை நடத்திக் காட்டினர். அதற்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த 21ம் தேதி 28 சங்கப் பிரதிநிதிகளும் சென்னையில் ஒன்றாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து மாவட்டத்திலும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் இந்த போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட தமிழக அரசு ஆசிரியர்கள் அமைத்துள்ள ஜாக்டோ என்ற அமைப்பை இரண்டாக உடைக்க வீயூகம் வகுத்தனர். அதன்படி சில ஆசிரியர்களை பிடித்து ஜாக்டா என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த புதிய அமைப்பும் அரசுக்கு ஆதவான கோஷங்களை எழுப்பி வருகிறது. இந்த புதிய அமைப்பு குறித்து ஜாக்டோ அமைப்பினர் கூறும் போது, அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள். ஆசிரியர்கள் பிரச்னை என்னவென்றே தெரியாதவர்கள் என்று கூறுகின்றனர். இருப்பினும் ஜாக்டோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று சிறை நிரம்பும் போராட்டமாக மாறும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசு ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதை ஏன் தவிர்க்கின்றது என்று புரியவில்லை.