இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், கட்டாயம் தலைக் கவசம் அணிந்து வர வேண்டும். மோட்டார் வாகனத்தில் வரும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது.
மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில்,
சாலை விதி மீறல்
இந்திய தேசிய குற்றவியல் அறிக்கைப்படி தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 65 ஆயிரமாக உள்ளது. அதில் 18 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆகும். சாலை விதிகளை மீறுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
18 வயதுக்கு குறைந்தவர்கள்
மோட்டார் வாகனச் சட்டம் 1986-இன் படி 18 வயதுக்கு குறைந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக உள்ளது. குறிப்பாக தலைக்கவசம் அணியாததே இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஆசிரியர்களே முன்மாதிரி
சாலை விபத்துகளை குறைப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு என்பதை உணரும் வகையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துப் பணியாளர்களும் தலைக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமல்லாமல் இது போன்று தலைக்கவசம் அணிந்து வருவது அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
படிக்கட்டுப் பயணம்
மேலும், பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது, சாலைகளை இருபுறமும் பார்த்துக் கடக்க வேண்டும் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
15 நிமிட இடைவெளி அவசியம்
பள்ளி வேளை நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்புவதால் தான் மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர். எனவே 15 நிமிஷ இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.