பள்ளிகளில் சிறப்பான முறையில் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதினை தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பெற உள்ளனர்.
ஆசிரியர் தின விழா
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டு தோறும் ஆசிரியர் தினத்தன்று இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
விருதுப் பட்டியல்
பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமைப் படுத்துதல், ஆசிரியப் பணியை கொண்டாடுதல் உள்ளிட்ட நோக்கங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு நல்லாசிரியர் விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.
தேசிய நல்லாசிரியர் விருது
அந்த வகையில் இந்த ஆண்டு, தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மூன்று ஆசிரியர்கள் தேர்வு
தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் தற்போது, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள டயமென்ட் ஜூப்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி ஆகியோர், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் சார்பில் விருதினை பெறவுள்ளனர்.
புதுச்சேரியில் ஒருவர்
தமிழகத்துடன், புதுச்சேரியைச் சேர்ந்த வில்லியனூர் கூனிச்சம்பேட் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ்.சசிகுமாரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் விழா
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள நல்லாசிரியர்களுக்கு நாளை (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்கு மோடி வாழ்த்து
இதனிடையே, சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். நல்ல ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகள். ஆசிரியர்களில் தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று முன்னதாக விருது பெற்றவர்களுடன் உரையாடுவதற்கும், இளம் மனதை மாற்றுவதற்கான அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின''வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர் பணிக்கு பெருமை தேடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம் என்றும், நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக்கூடிய ஒரே கருவி கல்வி தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அல்லும் பகலும் உழைப்பவர் ஆசிரியர்கள்
மாணாக்கர்களுக்காகத் தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது எனவும், மாணவ சமுதாயத்திற்காக அல்லும் பகலும் உழைக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.