கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலம் முதலே உலகப் பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. குறிப்பாக, இந்தியாவில் மந்த நிலையில் இருந்துவந்த பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றது.
இந்நிலையில், இந்நோயினைக் கட்டுப்படுத்தும் விதமாக உள்ள ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக வேலையிழப்பும் அதிகரித்த நிலையில், தற்போது ஐடி நிறுவனங்கள் புது சிக்கலைச் சந்தித்துள்ளன.
இந்திய பொருளாதாரத்தில் ஐடி பங்கு
நம் நாட்டினைப் பொறுத்தவரையில் பொருளாதார மேம்பாட்டில் ஐடி துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலையிழப்பு, ஊழியர்கள் கட்டாய வெளியேற்றம் என்பதும் இங்கு வாடிக்கையான ஒன்றாகத்தான் உள்ளது.
கொரோனாவினால் பாதித்த ஐடி நிறுவனங்கள்
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் ஒன்று ஐடி நிறுவனங்களின் வேலையின்மை. குறிப்பாக, இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச் சி எல் உள்ளிட்ட நிறுவனங்களில் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கான வேலைக்கே உத்தரவாதம் இல்லாமல் போனது.
9100 பேருக்கு வேலை இல்லை
மேற்குறிப்பிட்ட 4 பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இந்தியாவின் ஒட்டு மொத்த ஐடி ஊழியர்கள் 25 சதவிகிதம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறான மாபெரும் நிறுவனங்களிலேயே ஊரடங்கின் காரணமாகக் கடந்த ஜூன் மாதம் 9,100 வேலை வாய்ப்புகளைக் குறைத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்பிழப்பு
மேலும், இந்திய ஐடி நிறுவனங்களில் கடந்த ஜூன் மாதம் 9,100 வேலை வாய்ப்புகளை இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச் சி எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் குறைத்துள்ளனர். அதாவது வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களை விட குறைவாகவே புதிய ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால் கடந்த 2019 ஜூன் மாதத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களை விட 22,622 பேரை கூடுதலாக வேலையில் சேர்த்துள்ளனர்.
வேலையை தற்காத்துக்கொள்ளுங்கள்
ஐடி துறையில் நிலவி வரும் வேலைவாய்ப்புழப்பு போன்ற நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கான சிறப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, மற்றவர்களை விடக் கூடுதலாகவும், சிறப்பாகவும் உழைக்க வேண்டும்.