தமிழகத்தில் பி.இ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறைந்தது போல முதுநிலை பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மொத்தமுள்ள இடங்களில் வெறும் 24 சதவிகிதம் மட்டுமே நிரம்பியதாகத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக் கழக டான்செட் தேர்வின் அடிப்படையில் முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான டான்செட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இத்தேர்வு முடிவுகள் ஜூலை 5ம் தேதி வெளியானதைத் தொடர்ந்து முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தரவரிசைப்பட்டியல் வெளியான நிலையில், 4 ஆயிரத்து 779 மாணவர்கள் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர். இது தவிர கேட் 2019 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 489 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு தற்போது முடிவடைந்தது. இதில், 3,852 மாணவர்களுக்கு மட்டுமே சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு 11 ஆயிரத்து 809 எம்இ, எம்பிஏ, எம்சிஏ இடங்கள் உள்ளன. இவற்றில் 2,198 இடங்கள் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 1,567 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளது.
ஆனால், தற்போது மொத்தம் 15 ஆயிரத்து 574 இடங்களில், வெறும் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இது மொத்த சதவிகிதத்தில் வெறும் 24 சதவிகிதமே ஆகும்.