பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (நேற்று) முதல் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு ஒரே இடத்தில் பணி முடித்தவர்கள் பங்கேற்று இடமாறுதல் பெறலாம் என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் இடமாறுதல் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி ஒரு இடத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே இடமாறுதல் பெற முடியும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இடமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஒரு வாரத்துக்கு முன்பே மாவட்ட வாரியாக பெறப்பட்ட நிலையில், ஜூலை 8ம் தேதியன்று இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதலில் தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும், பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் அதன்பின் அந்தந்த மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.