பள்ளிகளில் கட்டமைப்பு பிரச்னை, பாலியல் சீண்டல், வன்முறை சம்பவங்கள், ஆசிரியர்கள் - மாணவர் மோதல், ஆசிரியர்களின் பல்வேறு போராட்டங்கள் என, பல்வேறு பிரச்னைகள் தொடருகின்றன.
ஓராண்டாக நீடித்து வரும் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன; எப்படி இருக்க வேண்டும் என்பன குறத்து, மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ராணிப்பேட்டையில், மாநிலத்தின் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியர்கள் கவனிக்கவும்...!
ஆசிரியர்கள் அனைவரும், பள்ளி துவங்கும் முன், பணிக்கு வர வேண்டும். வகுப்பறையில், ஆசிரியர்கள் மொபைல் போனில் பேசினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை, விரைவாக இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டடங்களில், மாணவர்களை அமர வைக்கக்கூடாது. பள்ளி வளாகத்தில் கிணறு இருந்தால், அதை தலைமை ஆசிரியர்கள் சீர்செய்ய வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. 'ஜங் புட்' என்ற, உடல்நலத்துக்கு தீங்கான உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, சத்தான உணவு உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் மனதை பாதிக்கும் தண்டனைகளை வழங்கக் கூடாது.
அனைத்து பள்ளிகளிலும், 'செஸ்' விளையாட்டுக்கு தனி வகுப்பறை அமைக்க வேண்டும். மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் அணிந்து வரக்கூடாது. அதை மீறி அணிந்து வந்தால், பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அறிவுறுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் டிசம்பருக்குள் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா உள்ளிட்டவற்றை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் எந்த விழாக்கள் நடந்தாலும், சினிமா பாட்டுக்கள் இசைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து போட்டிகளிலும், ஒரே மாணவரே இடம் பெறாமல், அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும்.
இலவச திட்டங்களுக்கு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்கு, மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு நல்லொழுக்க கல்வி வழங்க வேண்டும். எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
ஊக்கத்தொகை சார்ந்த போட்டி தேர்வுகளில், அதிக மாணவர்கள் பங்கேற்க வேண்டும். மதிய உணவு நேரம் முடிந்த பின், வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும்.
பள்ளியின் வகுப்பறை மற்றும் பெயர் பலகை சுண்ணாம்பு பூசப்பட்டு, பளிச்சென இருக்க வேண்டும். பள்ளி இடைவேளை நேரத்தை, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றி அமைக்க வேண்டும்.
பஸ்சின் கூரையில், மாணவர்கள் ஏறி வராமல் அறிவுறுத்த வேண்டும். மரத்தடிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது. மதிய உணவின் தரம், முட்டையின் தரம் போன்றவற்றை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
முக்கிய உத்தரவுங்க...!
vபள்ளியின் குடிநீர், கழிப்பறை நிலவரம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் போன்ற விபரங்களை, முதன்மை கல்வி அலுவலரின்அனுமதியின்றி, பத்திரிகையாளர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது.
vபள்ளியில் மாணவர்கள் அடித்து கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல்,சாலை விபத்து, இன்னும் பிற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதை முதன்மை கல்வி அலுவலர் அனுமதித்தால் மட்டுமே, பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
vவிழாக்களில், சினிமா பாட்டுக்கள் இசைக்கக் கூடாது; மரத்தடியில் பாடம் நடத்தக் கூடாது; பள்ளிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தகவல்களைபத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது.
vமாணவ, மாணவியர்கள் மனதை பாதிக்கும் தண்டனைகள் வழங்கக்கூடாது.