அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகங்களை கட்டமைக்க வேண்டும் என பள்ளக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாடப்புத்தக அறிவு மட்டும் போதாது
மாணவர்கள் தொடர்ந்து கல்வி சார்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அவர்களின் அறிவு வளரும். ஆனால், காலச் சூழ்நிலைக்கேற்ப கல்வி மாற்றமடைகிறது. அதனால் மாணவர்கள் பாடநூல்கள் மட்டுமல்லாது, பாடத்தோடு தொடர்புடைய நூல்களையும் படிக்கும் போது மாணவர்களின் அறிவுத் திறன் பெருகும். எனவே, பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
நூலகம் கட்டாயம்
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் நூலகம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஒரு அறையினை நூலக அறையாக மாற்றி, பள்ளி நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகம்
ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 1,000 புத்தகங்கள் உள்ள பள்ளி நூலகம் செயல்பட வேண்டும். இந்த நூலகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்றை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த நூலகப் பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து, மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.
ஆங்கிலம் பேசும் திறன் வளர்க்க
இவ்வாறு நூலகங்களை அமைத்து மாணவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் மாணவர்களின் பேச்சுத் திறன், எழுத்துத்திறன் மட்டுமின்றி ஆங்கிலம் பேசும் திறன், வாசிப்புத் திறனும் மேம்படும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட நூல்கள்
பள்ளிகளில் பயன்பாட்டுக்கு மிகையாக உள்ள நாற்காலி மற்றும் மேஜைகளைப் பள்ளி நூலகத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்துகின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.
நேரம் ஒதுக்க வேண்டும்
நூலகத்தில் உள்ள நூல்களைப் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும்போது பள்ளி நூலக செயல்பாட்டினை பார்வையிட்டு இந்தச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முனைப்புடன் தினமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.