11ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு முன்னதாகவே கேள்வித் தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11, 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு கடந்த 12ம் தேதியன்றும், பிற வகுப்புகளுக்கான தேர்வு கடந்த 10ம் தேதியன்றும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 11ம் வகுப்புக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே, காலையிலேயே அத்தேர்விற்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை அறிந்த ஆசிரியர்கள் பெறும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கூறுகையில், தேர்வு தொடங்கிய சில நாட்களுக்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாவதாகத் தகவல்கள் வந்தன. அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற 11ம் வகுப்பிற்கான வணிகவியல் தோ்வு வினாத்தாள் காலையிலேயே சமூக வலைதளங்களில் வெளியானது.
அதேப் போன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வுகளின் வினாத்தாள்களும் முன்னதாகவே வெளியாகியிருந்தன. இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.