தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் , பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுத் தேர்வு ஒத்திவைப்பு
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு அரசுத் துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில், பள்ளித் தேர்வுகளும் அடங்கும். தற்போது ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் சில பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நுழைவுச் சீட்டும் வெளியிடப்பட்டது.
பெற்றோர்கள் எதிர்ப்பு
இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், மேலும் சில மாவட்டங்களில் கொரோனா இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் குழந்தைகளைத் தேர்வுக்காக வெளியில் அனுப்ப முடியாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் அதிருப்தி வெளிப்படுத்தி வந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான 10ம் வகுப்பு தேர்வு குறித்து உயர் நீதிமன்றத்திலும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
முதலமைச்சர் ஆலோசனை
இதனிடையே, 10ம் வகுப்பு தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், 10ம் வகுப்பு தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், இந்த ஆலோசனை இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்) பகல் 12.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வலுத்து வருகிறது. நீதிமன்றமும், தேர்வை தள்ளி வைக்க அரசு பரிசீலிக்கக் கேட்டுக் கொண்டது. இதை அரசு பரிசீலித்தது.
தேர்வு முழுமையாக ரத்து
நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பு இல்லை என இது சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் மற்றும் நோய் தொற்று கருத்தில் கொண்டும், மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க, வருகிற 15ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், 11ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அனைவரும் ஆல் பாஸ்
இந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு தேதி அறிவிக்கப்படும்
12ம் வகுப்பைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.