சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் நான்காம் கட்டத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) சி. சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் நடத்தப்பட்ட கல்வியாண்டு மற்றும் துணைத் தேர்வுகளின் மூன்று கட்ட முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, இளநிலைப் பாடப் பிரிவில் புவியியல் முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, ஆங்கிலம் முதலாமாண்டு, தமிழ் முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, தமிழிசை முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, வரலாறு முதலாமாண்டு, இசையியல் (கலைக் காவேரி) முதலாமாண்டு, பரதநாட்டியம் (கலைக் காவேரி) முதலாமாண்டு போன்றப் பாடப் பிரிவுகளிலும், முதுநிலைப் பாடப் பிரிவில் புவியியல் முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, தமிழ் முதலாமாண்டு போன்றப் பாடப் பிரிவுகளிலும், பட்டயம் பரதநாட்டியம் (கலைக் காவேரி), இசை (கலைக் காவேரி), நாணயவியல், தொடு சிகிச்சை, கல்வெட்டியல், கோயில் கட்டடக்கலைப் போன்ற பாடப் பிரிவுகளிலும் சான்றிதழ் தொடு சிகிச்சை, சான்றிதழ் தமிழ்ப் புலவர் பயிற்சி போன்ற பாடப் பிரிவுகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளை www.tamiluniversity.ac.in என்ற தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பார்த்து அறிந்துகொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.