உலகிலேயே சிறியதாகவும், எடை குறைவானதாகவும் கொண்ட செயற்கைக் கோளை வடிவமைத்து தமிழக மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ரியாஸூதீன் (18). தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலை.யில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2-ம் ஆண்டு படித்து வரும் இவர் உலகிலேயே சிறியதாகவும், எடை குறைவானதாகவும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளார். இந்த சிறிய ரக செயற்கைக்கோள் 2021-ஆம் ஆண்டு நாசா விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதுகுறித்து மாணவர் ரியாஸூதீன் கூறுகையில், நாசா விண்வெளி மையம் மற்றும், ஐ டூ லேனிங் உள்ளிட்டவை இணைந்து நடத்திய 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளில் 73 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் நான் உருவாக்கிய விஷன்- 1, விஷன்- 2 என்ற 2 செயற்கைக் கோள்களைத் தேர்வு செய்துள்ள நாசா அதற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.
இந்த 2 சிறிய வடிவிலான செயற்கைக் கோள்களும் தலா 37 மி.மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டதாக வடிவமைத்துள்ளேன். விஷன்- 1 செயற்கைக் கோள் 2021 ஜூன் மாதம் நாசா விண்வெளி தளத்திலிருந்து, எஸ்.ஆர்- 7 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
அதேபோல விஷன்- 2 செயற்கைக்கோள் ஆர்.பி-6 என்கிற தளத்திலிருந்து ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.