தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு கூடுதலாக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவை விட அரசு பள்ளிக்கு மாணவர்கள் அதிகம் வந்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட மாணவர்கள் விருப்பத்தின் படி பள்ளிக்கு வர வேண்டும் எனவும், மாணவர்களின் வருகை பதிவைக் கணக்கிடத் தேவை இல்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, வருகின்ற நாட்களில் மீதமுள்ள மாணவர்களும் பள்ளிக்கு வர வாய்ப்புள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.