தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும், பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்படலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்
கொரோனா தொற்றினால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. இதனிடையே, தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கற்றலை மேம்படுத்த திட்டம்
இந்நிலையில், கொரோனா ஊரடங்கினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்தப் புத்தாக்க பயிற்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் தேர்வு நடைபெறும்
அதன்படி, முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9, 10ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு
இந்த நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் 1 ஆம் வகுப்பு முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் குறைபாடைப் போக்க நவம்பர் 12-ல் NAS திறனறி தேர்வை நடத்தவும், தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது
இதனிடையே, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெரும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் கவனத்திற்கு
மேலும், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் வகுப்பறையில் அமரலாம். குழந்தைகளால் நீண்ட நேரம் முகக் கவசம் அணிய முடியவில்லை என்றால் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை
அதோடு, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வருவது கட்டாயம் இல்லை. மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதன் படி, தமிழகத்தில் பள்ளிகளை முழுவதுமாக திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது உறுதி இல்லை
இந்த நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள சூழலில், தற்போது இது குறித்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நர்சரி பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.