தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மத வழிபாடு, பொது மக்கள் அதிகம் கூடும் சந்தைக செயல்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கவும், மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது குறித்த முக்கயி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடியாத சூழல் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் கல்வி கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு, நோய்க் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளிகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 9ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி வரையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு குறிப்பிட்டுள்து. அதில், கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்தை செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுககு உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு
மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தேசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவத் தேவைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆகஸ்ட் 16 முதல் கல்லூரிகள் திறப்பு
தொடர்ந்து, மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கான வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://twitter.com/TNDIPRNEWS/status/1423630923476525057