தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று கோலாகலமாக வெளியாயின. கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு மிகச் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள் மற்றும் 4,945 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8 லட்சத்து 11,172 பேர் தேர்வு எழுதினர்.
இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் மொத்தம் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.17 சதவிகிதமாகும்.
இதில் 4 லட்சத்து 4,143 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 3 லட்சத்து 35,396 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 7.43 சதவிகிதம் மாணவியர் தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 85.75 சதவீதமாக உள்ளது.
தமிழ் பாடத்தில் 8 பேர் செஞ்சுரி (100 மதிப்பெண்கள்) எடுத்துள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 3,431 பேர் சதம் எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 91.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 17-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் 89.41 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 90.85 சதவீதம் மாணவச் செல்வங்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 535 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.14 சதவீதம் பேரும், மாணவிகள் 94.14 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகளில் 12 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி உள்ளனர். இது 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகள் அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 487 பேரில் 9 ஆயிரத்து 529 பேரும் (82.95 சதவீதம்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 816 பேரில் 6 ஆயிரத்து 372 பேர் தேர்ச்சி (81.59 சதவீதம்) பெற்றுள்ளனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 809 மாணவ, மாணவிகளில் 10 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 75.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












