ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே ஆசிரியராகப் பணியாற்றி வருவோர் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கே அவகாசம்
இச்சட்டமானது தமிழகத்தில் 2011-இல் நடைமுறைக்கு வந்ததை அடுத்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 2016-ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டு, பின் 2019 மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
1500 அரசு ஆசிரியர்கள்
தற்போது அந்த அவகாசமும் முடிவுற்ற சூழ்நிலையில் தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
இதுகுறித்தான வழக்கு மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
தகுதியற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
இந்நிலையில் டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
1500 ஆசிரியர்கள்
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சியளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். டெட் தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1,500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்களை, மாவட்ட ஆசிரியர்கள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு தெரிவிப்பார்கள்.
ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கருத்தாளர்களாக செயல்பட்ட முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்டு இந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரு வாரங்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.