கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோனார்பாளையம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த துவக்க பள்ளி ஒன்றில் சில ஆண்டுகளாக 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்ததால், இந்தாண்டு பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதைத் தடுக்க ஊர் மக்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டம் ஓன்றை அறிவித்தனர். கோனார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் முதலில் சேரும் 10 மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிப்புதான் அது.
இதோடு மட்டுமல்லாமல், பள்ளியில் சேரும் அனைவருக்கும் ரூ. 5,000 ரொக்கம், இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவித்ததோடு, இதை விளம்பரப்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
இதற்கு கைமேல் பலனாக 2 மாணவிகள் உள்பட 3 பேர் இப்பள்ளியில் திங்கள்கிழமை புதிதாக சேர்ந்துள்ளனர்.
இதனால் தற்போது இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகவும். ஜூலை 4-ஆம் தேதி மேலும் 4 மாணவர்கள் பள்ளியில் சேர உள்ளதாக தலைமை ஆசிரியர் ராஜேஷ் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த துவக்க பள்ளி மூடப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாக சொந்த கிராம மக்களே முன்வந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.