ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதியதாக ஆசிரியர் பணி கேட்டு தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பணி நியமனப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து அறிந்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் எதிரொலியாக தமிழகத்தில் 100 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவில்லை. இதனால், பள்ளிகளை நடத்துவதில் பெரும் சிரமம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஆசிரியர்கள் வராத பணியிடங்களில் புதியதாக ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர்கள் என பணியில் நியமிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
தமிழகம் முழுவதும் தற்போதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணியில் சேரவில்லை என்றால் புதிய ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வழங்கப்பட உள்ளன. அந்த பணி நியமனப் படிவத்தை பார்த்து, ஆசிரியர் பணி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிபந்தனைகள்:-
- நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ம் தேதி காலை 9 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியேற்க வேண்டும்.
- இந்த ஆசிரியர் பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
- இந்த ஆணையின் அடிப்படையில் அரசின் வேலை வாய்ப்புக்கு எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படாது.
- அரசால் அறிவிக்கப்படும்போது உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவீர்கள்.
- பணியேற்க வேண்டிய நாள் முதல் தொகுப்பூதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
- தொகுப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம் அரசால் நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே வழங்கப்படும்.
இவ்வாறு அந்த நிபந்தனையில் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய ஆசிரியர்கள் பணியில் சேர்வதா வேண்டாமா என்ற அச்சம் விண்ணப்பதாரர்களிடையே ஏற்பட்டுள்ளது.