தமிழகத்தில் செயல்பட்டு வரும் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாகத் தமிழக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதனால், இந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டமைப்புகளற்ற அரசுப் பள்ளிகள்
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவது நம் அறிந்ததே.
கணக்கெடுப்பில் திடுக் தகவல்
இதனிடையே, தொடக்கக் கல்வித்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும், 76 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 82 பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் என மொத்தம் 1,848 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருகின்றனர்.
மத்திய அரசின் விதிமுறை
மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்தப் பள்ளியின் பட்டியல்களை ஓரிரு நாள்களுக்குள் பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர்களுக்கும் இடமாற்றம்
மேலே குறிப்பிட்ட 1,848 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
கல்வித் துறை சுற்றறிக்கை
இது குறித்தான தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாற்றுப் பள்ளியின் முழு விபரம்
அந்த சுற்றறிக்கையில் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்கள், இரண்டு பள்ளிகளுக்குமான தொலைவு, மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவுள்ள வசதி, மற்றும் சிரமங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரு பள்ளிகளுக்கும் இடையில் ஆறுகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் ஏதேனும் உள்ளதா என தெரிவிக்கும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று மறுத்த அமைச்சர்
கடந்த மாதம் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத நான்கு பள்ளிகள் மூடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். மாணவர் வருகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பள்ளிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பத்துக்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தியிருப்பது பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications












