தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்தும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்புச் சேவை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி லீவெடுப்பது கஷ்டம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்த கடந்த 2018 அக்டோபர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
புதிய சீருடைகள்
அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான புதிய சீருடைகள் வரும் கல்வி ஆண்டில் அமலாக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்த படி தற்போது அதன் வண்ணங்கள் குறித்த விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கும் நிலையில் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோட்டிக் டீச்சர்
மேலும், பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கத் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையிலும், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகுமுறைகள் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அசத்தலான புது அறிவிப்பு
கல்வியாளர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், தொலைக் காட்சி சேனல் ஒன்றினை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.
ஜூனில் களமிறங்கும் புதிய கல்வி
தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்ததைத் தொடர்ந்து முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
24 மணி நேரமும் கல்வி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த தொலைக் காட்சி சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலேயே ஆசிரியர்கள்
மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உள்ளிட்ட அனைத்தும் ஒரே அம்சமாக கிடைக்கும்.
அரசு கேபிளில் 200-ஆவது சேனல்
இதனை ஒளிபரப்புவதற்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும்.
ஒரே நேரத்தில் 53 ஆயிரம் பள்ளிகள்
இச் சேவையினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதுமுள்ள 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.