தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான புதிய சீருடைகள் வரும் கல்வி ஆண்டில் அமலாக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதன் வண்ணங்கள் குறித்த விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான புதிய சீருடை வண்ணங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பச்சை நிற சீருடையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு நிற சீருடையும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதில், பச்சை நிற சீருடை என்பது பச்சை நிற அரைக் கால் சட்டையும் இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் கொண்டது. பழுப்பு நிற சீருடை என்பது பழுப்பு நிற முழுக் கால் சட்டை மற்றும் வெளிர்பழுப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டை ஆகியவற்றைக் கொண்டது. மேலும், மாணவிகளுக்குக் கூடுதலாக வெளிர்பழுப்பு நிற கோட் உண்டு.
இந்தச் சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து தமிழக அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.