தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து, கல்லூரிகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்வி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் வழியில் வகுப்புகள்
கொரோனா தொற்றினால் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்காதவாறு மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
மீண்டும் அதிகரித்த கொரொனா
இதனிடையே, தற்போது மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், முன்னதாக பரவிய கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த தற்போது பரவும் உருமாறிய கொரோனா குறித்தும், அதற்கான தடுப்பு மருந்து குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் பரவும் தொற்று
குறிப்பாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மூடப்படும் கல்லூரிகள்
தற்போது, முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர இதர ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களும் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை
இதனிடையே, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை அடுத்து அதனை பரிசீலனை செய்த தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படக் கூடாது எனவும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மகிழ்ச்சியில் மாணவர்கள்
இன்று முதல் கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பருவத் தேர்வுகளும் கடந்த ஆண்டைப் போலவே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.