தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் நவம்பர் 16ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் கல்வி நிறுவனங்களைத் திறக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பள்ளிகளை திறக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பானது பொது மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
பொது மக்களிடையே கருத்துக் கேட்பு
மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இதுகுறித்து கருத்தும் கேட்கப்பட்டது.
தமிழக அரசு அதிரடி
இதனிடையே, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான உத்தரவு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
செய்திக்குறிப்பு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் என வல்லுநர்கள், பெற்றோர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே, பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி |கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட முதலில் அனுமதிக்கப்பட்டது.
மாறுபட்ட கருத்துகள்
இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். மேலும், 9.11.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்துக் கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மறு உத்தரவு வரும் வரை
தற்போது பெறப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை கல்வித்துறை ஆராய்ந்து, 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு
மேலும், கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படி, 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின் படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.
விடுதிகள் திறக்கப்படும்
மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்குக் கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். வரும் டிசம்பர் 2ம் தேதியன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வழியிலான கல்விமுறை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.