தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதோடு, மத வழிபாடு, பொது மக்கள் அதிகம் கூடும் சந்தைகள் செயல்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக, 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரித்த கொரோனா
இதனிடையே, சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் அலை பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடியாத சூழல் தொடர்ந்து வரும் நிலையில் கல்வி கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு, நோய்க் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளிகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதியுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி வரையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் இறுதியாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பொது மக்கள் கூடும் இடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
மேலும், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தேசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது, தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவத் தேவைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளிகளைத் திறக்க முடிவு
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருவதாக ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 20ம் தேதியன்று நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகு இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வித் தரம் உயர்வு
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது , பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.
சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, செப்டம்பர் 1 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரிகளைத் திறக்கவும் முடிவு
தொடர்ந்து, மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை விரைவில் திறக்கவும், அதற்கான வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.