தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 5-ம் தேதி இணையதளம் வழியாகப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் (அரசு ஒதுக்கீடு இடங்கள்) இடங்கள் வரை வழங்கப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு (அட்மிஷன் கவுன்சிலிங்) 2018-ம் ஆண்டு முதல் இணையவழியாக திறமையான முறையில் நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டிலும் 440 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்ற அமைப்பு உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த அமைப்பு இந்தாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அந்தத் தரவரிசைப் பட்டியலில் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் 249-ஆவது இடத்தில் இடம்பெற்று சிறப்பு பெற்றுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங்கை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டில் (2024-25) பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 5-ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஜூன் முதல் வாரம் வரை மாணவச் செல்வங்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து ஜூலை 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்பின் கவுன்சிலிங்கை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளோம்.
அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் முறையான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












