தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தரப்பில் கட்டண நிர்ணயக் குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 530க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தனியார் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாணவர்களிடம் வசூலிக்கக்கூடிய கட்டணத்தின் மதிப்பு மாற்றப்படும்.
இந்தக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். தற்போது அந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, பொறியியல் கல்விக்காண கட்டணம் என்பது அரசுக் கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகளில் கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இதனிடையே, 25 சதவிகிதம் வரையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்படும். அதற்குப் பின்னரே கட்டாய நிர்ணய குழுவானது எந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு கட்டணத்தைக் கூடுதலாக நிர்ணயிக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்.