கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவப் படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியில் நடத்த தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும், வீட்டிலிருந்தபடியே படிப்பைத் தொடரும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாகத் தமிழகத்தில் மருத்துவப்படிப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்துவதற்குத் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் வகுப்புகள் மூலம் 6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த ஆன்லைன் வகுப்பின் மூலம் எம்பிபிஎஸ், முதுநிலை மருத்துவப்படிப்புகள், பல் மருத்துவம், துணை மருத்துவப்படிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாடங்களை பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து, அவைகளை வீடியோக்களாக ஆன்லைனில் அப்லோடு செய்யப்படுகிறது. இதன் மூலம் மருத்துவ மாணவர்கள் தங்களுக்கான பாடங்களை வீட்டிலிருந்தபடியே, பல்கலைக்கழக இணையதளம் மூலமாக கற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.