நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுகட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்து விதமாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவினால் மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் கல்லூரிகளைத் திறப்பதற்கான நடைமுறைகளையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்வு ரத்து
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
இதனிடையே, சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் தளர்வுகளில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி
தெலங்கானா, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் விரைவில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வி சாந்த துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில்
ஊரடங்கில் முக்கியமாக பாதிக்கப்பட்டதில் கல்லூரிகள், பள்ளிகள் தான். தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாதிப்பு குறைந்தபின் முதலமைச்சர் ஆலோசித்து அறிவிப்பார் என்று அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிகள் திறப்பு
ஜூலை மாத இறுதியில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கல்லூரி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கல்லூரிகள் திறப்பது உறுதி
தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடந்து வருகிறது. தற்போது வரை கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத சூழல் நீடித்து வருவதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
செமஸ்டர் தேர்வு கட்டாயம்
இதுகுறித்து மேலும் கூறிய அவர், அனைத்து பல்கலைக் கழகங்களும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். ஒட்டுமொத்த பல்கலைக் கழகங்களும் செமஸ்டர் தேதிகளை அறிவிக்க வேண்டும். பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகம்
மேலும், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வின் போது ஒற்றை சாளர முறையைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
கல்லூரிகளுக்கு வர உத்தரவு
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 9 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியிலான வகுப்புகள் தொடங்கப்படவுள்ள நிலையில் அனைத்து பேராசிரியர்கள், இதர பணியாளர்கள் வரும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வர வேண்டும் என உயர் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.