கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமெடுத்து வருகிறது. நாள்தோறும் ஆயிரண் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதுகுறித்த கூடுதல் விபரங்களை காணலாம் வாங்க.
கொரானாவால் மூடப்பட்ட பள்ளிகள்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தொடர்ந்து தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான சூழ்நிலை இல்லாதவாறு உள்ளது.
ஆன்லைன் வழியில் வகுப்புகள்
இருப்பினும், ஊரடங்கினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன் வசதிகள் இல்லாத மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் கல்வித் தொலைக் காட்சி வாயிலாகவும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தேர்வுகள் எப்போது?
இதனிடையே, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் எப்போது தேர்வு நடைபெறும் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தை நெருங்கியுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்டாயம் தேர்வுகள் நடைபெறும்
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடித்த பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்படாது!
கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் தேர்வு நடத்தப்படும். 12-ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது என்று தெரிவித்தார்.
தேர்வுக்கு கால அவகாசம்
மேலும் பேசிய அவர், கொரோனா தொற்றின் தீவிரம், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிரச்சனைகள் உள்ளதால், தற்போது தேர்வை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தொற்றின் தீவிரம் குறைந்து, சுகாதாரத் துறை அனுமதித்தால் பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான தேதி 15 அல்லது 30 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என்றார்.