10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலை கொள்ளவேண்டாம். அவர்கள் உடனடியாக துணைத் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. அவர்கள் உடனடியாக துணைத் தேர்வு எழுத இணையதளத்தில் விண்ணப்பித்துவிட்டு படிக்கத் தொடங்கினால் போதும். தேர்ச்ச பெற்று இதே ஆண்டிலேயே 11-ம் வகுப்பிலோ அல்லது டிப்ளமோ படிப்பிலோ அல்லது ஐடிஐ-களிலோ சேர முடியும்.
தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உயர்நிலைப் படிப்புகளுக்குத் தயாராகி விட்டனர்.
இந்நிலையில் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணை தேர்வுகள் உடனடியாக நடத்தப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
தற்போது 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளோம்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இந்தத் துணைத் தேர்வு உடனடியாக நடத்தப்படுகிறது.

மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்
ஜூலை மாத துணைத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16ம்தேதி முதல் 24-ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
10-ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70, மொத்தம் ரூ.195 ஆகும். இதனை சேவை மையத்தில், பள்ளியில் பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டும். இதை செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பெற முடியும்.
மேற்கண்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில் ஜூன் 3 மற்றும் 4-ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கானசிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வை எழுதலாம்.
மேலும், 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நிலை ஜூலை 2-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 2-ம் தேதி தமிழ், 3-ம்தேதி ஆங்கிலம், 4-ம் தேதி கணிதம், 5-ம் தேதி அறிவியல் 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 8-ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இவ்வாறு தமிழக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
துணைத் தேர்வுக்கான தேதிகள், விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிதற்கான பணிகளில் மாணவர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications












