நடப்பு கல்வியாண்டு முதல் 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் எனவும், அந்த வகுப்பிற்கான முப்பருவ பாடத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், 2020-21 ஆண்டில் எட்டாம் வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களுக்கும் கட்டாய தோ்ச்சியடைந்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் குறைவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.
பொதுத் தேர்வு
மாணவர்களின் கல்வித் தரத்தினை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத் தோ்வு நடத்தலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்தது. மேலும், இதற்கான முடிவை அந்தந்த மாநில அரசே முடிவு செய்துகொள்ளவும் சலுகை வழங்கப்பட்டது.
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே..!! வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை!
தமிழகத்தில் 5, 8-க்கு பொதுத் தேர்வு
மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழகத்தில் பெரும் எதிர்பு கிளம்பிய போதும் மாநில அரசு 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. தேர்வை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த எட்டு ஆண்டுகளாக அமலிலிருந்த, முப்பருவ பாட முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சியளிக்க உத்தரவு
இதனை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளதால் அந்த வகுப்பு மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், பொதுத்தோ்வில், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும் என்பதால் மூன்று பருவ பாடங்களுக்கும் ஆண்டின் இறுதி வரை ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தோ்வுகளும் நடத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
பள்ளிக் கல்வித்துறை அரசாணை
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் கீழ், மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு 2019- 20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தோ்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
முப்பருவ பாடம் ரத்து
ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கினால் மாணவா்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் 2020-21-ஆம் கல்வியாண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்டு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என அதில் கூறியுள்ளார்.