பொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. கடந்த 2ம் தேதி முதல் துவங்கியுள்ள விண்ணப்பப் பதிவில் தற்போது வரை 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 2ம் தேதி முதல் துவங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கி 11 நாட்கள் முடிவுற்ற நிலையில், இதுவரையில் மொத்தம் 87 ஆயிரத்து 33 பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tneaonline.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் "Click here for New Registration" என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிப்பதற்கான குறிப்புகள்:
விண்ணப்பிக்கும் முன் மாணவர்கள் கீழ்க்கண்டவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பெயர்
- மின்னஞ்சல் முகவரி
- அலைபேசி எண்
- வகுப்பு/சாதி தகவல்கள்
- பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்
- ஆதார் எண்
- பெற்றோரின் ஆண்டு வருமானணம்
- பள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)
- பன்னிரெண்டாம் வகுப்பு பதிவெண்
- பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.