தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாயின. மொத்தம் 94.56 சதவீத மாணாக்கர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து அறியலாம்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம்தேதி வரை நடந்தது.
பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின்னர் விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாயியன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிட்டது.
இந்த முறை மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37 ஆக உள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி கண்டுள்ளனர். இந்த ஆண்டில் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 சதவீதமாக உள்ளது.
அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் 91. 32 சதவீத தேர்ச்சி கிட்டியுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 97.45 சதவீதம் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை, http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., வழியே மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












