தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களின் தேர்வுத் தாள் திருத்தும் பணி தடைபட்டது.
அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் தேர்வுத் தாள் திருத்தும் பணி முடிவுற்று இன்று 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "மார்ச் 2020 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச்/ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத் தேர்வில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் இன்று (16.07.2020) வெளியிடப்படும். மேலும் மாணாக்கர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில், ஒட்டுமொத்தமாக மாணவிகள் 94.80 சதவிகிதம் பேரும், மாணவர்கள் 89.41 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 85.94 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளில் 96.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 96.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் 3 வது இடம் பிடித்துள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in அல்லது http://dge2.tn.nic.in என்ற இணையதளங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம்.