தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வுகளின்போது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர். அதிக மதிப்பெண்கள் பெற இந்த நடவடிக்கையை மாணவ, மாணவிகள் மேற்கொள்கின்றனர். கூடுதல் விவரங்களுக்கு tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை கீழே காண்போம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE TN) 12-ம் வகுப்புத் தேர்வுகளை கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடத்தியது.
இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 4.07% அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 ஆகும். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மொத்த தேர்வெழுதிய மொத்த மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 7,60,606 ஆகும். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,08,440, மாணவர்களின் எண்ணிக்கை 3,52,165, மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 1 ஆகும்.
இதில் தேர்ச்சி விவரங்கள்:தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196 (94.56%), மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,25,305(92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் - 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. தேர்ச்சி பெற்றோர் 7,55,451. தேர்ச்சி சதவிகிதம் 94.03% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தத் தேர்வுகளின்போது குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதுவோர் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்வதற்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், பள்ளிகள் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். மாணவ, மாணவிகள் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினாலோ, விடைத்தாள் நகல் பெறவோ பள்ளிகள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தத் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் இதே கல்வியாண்டிலேயே படிப்பைத் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
12-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு இந்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துத்தான் கல்வி நிறுவனங்கள், அவர்களுக்கு சேர்க்கையை வழங்குகின்றன.
தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்துக்குள் தமிழக தேர்வுகள் துறை அசல் மதிப்பெண் பட்டியலை வழங்கும். அதற்கு முன்னதாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுகள் துறை வழங்கும். இதை இணையதளங்களில் சென்று டவுன்லோடு செய்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மதிப்பெண்களைக் கொண்டு மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல், மறு இந்த மாணவர்கள் மறுமதிப்பீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி மறுமதிப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்துக்கு ₹505 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவை எடுத்துக் கொண்டு அதன்பின்னர் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்துக்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டண விவரங்கள் என்ன....:
ஒவ்வொரு பாடத்துக்கும் - ரூ.275,
மறுகூட்டல் கட்டணம்
உயிரியல் பாடத்துக்கு மட்டும் - ரூ.305 செலுத்தவேண்டும்.
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்)- ரூ.205
பணம் செலுத்தும் முறை
தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
மேலும், விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றவுடன், தேர்வு இயக்குநர வாரியம் 10 முதல் 15 நாட்களுக்குள் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த விடைத்தாள்களுக்கு மறு மதிப்பீடு செய்யும். இந்த மறுமதிப்பீட்டின் முடிவுகளை தேர்வுகள் இயக்குநரகம் அறிவிக்கும்போது மாணவர்களின் மதிப்பெண் தெரியவரும்.
இதேபோன்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத்தாள்களின் முடிவுகள் அறியப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












