தமிழகத்தில் கடந்த சில தினங்களாக 10, 11, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இதன் கேள்வித் தாள்கள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேள்வித் தாள்கள் முன்கூட்டியே வெளியாகி வருவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயிரியல் தேர்வு ஆகியவை திங்கள்கிழமை நடைபெறவிருந்தன. இதனிடையே, இந்த மூன்று தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களும் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதிர்ச்சியடைந்த கல்வித் துறை
கேள்வித் தாள் சமக வலைதளத்தில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த கல்வித்துறை, விரைவாக ஒவ்வொரு பள்ளிக்கும் புதிய கேள்வித்தாள் வடிவமைத்து வழங்குவதற்கு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகையான வினாத்தாள்கள் தேர்விற்கு வழங்கப்பட்டன. இருப்பினும், சென்னை மாவட்டத்தில் சில பள்ளிகளில் முன்கூட்டியே வெளியான வினாத்தாள்களே வழங்கப்பட்டுள்ளது.
அவலமான பள்ளித் தேர்வு
மாநில அளவில் பொதுத் தேர்வாக நடைபெறவேண்டிய இந்தத் தேர்வுகள் அனைத்தும் பள்ளி அளவிலான தேர்வாக மாறியுள்ள அவலம் முதல் முறையாகத் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
10 தனியார் அச்சகம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எழுதுவதற்காக அரசுத் தேர்வுத்துறையால் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வினாத்தாள்கள் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை அலுவலர்களால் 10 தனியார் அச்சகங்களில் அச்சிடப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாகப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறைதான் காரணமா?
கேள்வித்தாள் தயாரித்து அளிப்பதோடு அரசுத் தேர்வுத்துறையின் பணி முடிந்து விடுகிறது. தேர்வு நடத்தும் பணி முழுவதும் பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்தது. மேலும், கேள்வித்தாள் வெளியானது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் காவல்துறையில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர்.
புதிய திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை
இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமையும் வினாத்தாள் வெளியானது குறித்து மீண்டும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட உள்ளது. மேலும், வரும் கல்வியாண்டிலிருந்து அரையாண்டுத் தேர்வை மாவட்ட அளவில் வினாத்தாள் தயார் செய்து நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.