சென்னை: இனி துபை நகரில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆங்கிலம், அரபி மொழிகளில் எழுதத் தேவையில்லை. தமிழிலும் எழுதி லைசென்ஸ் பெற முடியும்
மேலும் இந்தி, மலையாளம், பெங்காலி மொழிகளிலும் தேர்வு எழுத அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய அரசு அமீரக நாட்டில்(யுஏஇ) போக்குவரத்து விதிகளை கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. நம்ம ஊர் போல எளிதில் டிரைவிங் லைசென்ஸ் வாங்கிவிட முடியாது. ஏகப்பட்ட கெடுபிடி. முன்பெல்லாம் ஆங்கிலம், அரபி, உருது மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதி லைசென்ஸ் பெறும் விதிகள் இருந்தன. இப்போது புதிதாக 7 மொழிகளில் தேர்வு எழுதி லைசென்ஸ் பெறுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் தந்துள்ளது.
தமிழ், ஹிந்தி, பெங்காலி, மலையாளம். சீன மொழி, ரஷிய, மொழி, பாரசீக மொழி ஆகியவற்றில் தேர்வு எழுதலாம்.
ஹிந்தி, மலையாளம், தமிழ், வங்காள மொழி, சீன மொழி, ரஷிய மொழி, பாரசீக மொழி உள்ளிட்ட 7 மொழிகளில் எழுத்துத் தேர்விலும், வாய்மொழித் தேர்விலும் பங்கேற்கலாம்.
அந்நாட்டில் வாகனத்தை இயக்கிக் காட்டுவதற்கு முன்பாக எழுத்துத் தேர்வும், வாய்மொழித் தேர்வு நடத்தப்படும்.
இதுகுறித்து அந்நாட்டு சாலை போக்குவரத்து ஆணையத்தின் ஓட்டுநர்கள் பயிற்சி மற்றும் தகுதிகள் அமைப்பின் இயக்குநர் ஆரிஃப் அல் மலேக் கூறியதாவது:
ஓட்டுநர் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு திரையில் கேள்விகள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கு அடியிலும் விடைகள் தரப்பட்டிருக்கும். அதைப் படிக்க முடியாதவர்களுக்கு வசதியாக முன்னரே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு ஒலிபெருக்கி, அதைப் படித்துக் காட்டும். இந்த வசதியைப் பயன்படுத்தி விடைகளை தேர்வு செய்யலாம். ஓட்டுநர் தேர்வுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கூடுதலாக மற்ற நாடுகளின் மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அக்டோபர் முதல் இது நடைமுறைக்கு வருகிறது என்றார் அவர்.
முன்பு தமிழகத்தைச் சேர்ந்த டிரைவர்கள் மொழி தெரியாததால் அங்கு டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாத நிலை இருந்தது. மொழி தெரியாமல் தடுமாறி வந்தனர். நன்றாக ஓட்ட பழகியிருந்தும் லைசென்ஸ் பெற முடியாததால் ஏராளமான தமிழக டிரைவர்கள் அங்கு வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை இருந்தது.
இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என விதிகள் மாற்றப்பட்டிருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த டிரைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழில் தேர்வு நடத்தப்பட இருப்பதால் இனி அவர்களுக்கும் வேலை கிடைக்கும்.